Wednesday 29 July 2015

திருநள்ளாறு சனீஸ்வரனை வழிபடும் முறை

திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை: முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம். எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.

No comments:

Post a Comment